Friday, August 31, 2012

பெரிது ....பெரிது.... பெரிது !!.......



நான் பெரிதா ?...நீ பெரிதா  ?...என்   மதம் பெரிதா ?...    உன் மதம்  பெரிதா ??...இவ் உலகினில்    இன்று    உள்ள   பெரும்   குழப்பமே    இதுதான் .  தெரியாமல்தான் கேட்கின்றேன்  இங்கு யார்தான்   பெரியவர்கள் ?....  கற்றது கைமண் அளவு நாம்  கல்லாதது   உலகளவு   என்று   உள்ளபோது   அறிவை   வைத்து    ஒருவனை பெரியவன்  இவன்தான்  என்று  எப்படி   தீர்மானித்து   விட  முடியும் ?.....அப்படி முடியுமானால்   அவன்   எல்லாம்   கற்றறிந்தவனாக   அல்லவா      இருத்தல் வேண்டும் .உண்மையில்    அதிகம் படித்தவர்கள்   என்றுமே தன்னைத் தானே அறிவாளி   என்று   காட்டிக்கொள்ள    விரும்புவதில்லை .

                 பணம் படைத்தவன் அதிலும் பரம்பரை பரம்பரையாய் பணம் படைத்தவன் அவனும் எப்போதும் தன்னிடம் உள்ள பணத்தை வைத்து தன்னை பெரியவன் என்று எண்ண மாட்டான் .நல்ல குணம் படைத்தவன் அதி வீரம் உடையவன் அவனும் தன்னை அவ்வாறு நினைக்க மாட்டான் .ஆக நாம் வாழும் இந்த பூமியில் யாருக்கு அதிகமாக போட்டி மனப்பாண்மை உள்ளதோ அவகளுக்குத்தான் இந்த எண்ணம் அதிகமாக இருக்கும் .ஆரோக்கியமான சில போட்டிகள் வாழ்வை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்லும். அதேபோன்று தேவை அற்ற வீண் விவாதத்தை வளர்த்துக்கொள்ளக் கூடிய    மனித பண்பை சீர்குலைக்கும்  நோக்குடன் தொடரும்  போட்டிகள் என்றுமே  எம்மை அழிவின்   பாதைக்கே   இட்டுச்   செல்லும் .

                                   ஆக  எமக்கு    எல்லாம்    தெரிந்தாலும் கூட எதுவுமே தெரியாதவர் போல் பிறரை ஊக்குவிப்பதிலும்   மேலும் பல நல்ல விசயங்களை தெரிய    முற்படும் போதும் எம்மை அறியாமலே அந்த மனிதர்கள் மீது ஒரு தனிப்பட்ட மரியாதை வந்துவிடும் .இதை விட்டு விட்டு கீழ்த்தரமாக பிறருடன் எம்மை நாம் ஒப்பிட்டு ஒரு தகுதியை எமக்குள் நாமே வளர்த்துக் கொள்ளுதலும்    பிறர் செய்யும் ஒவ்வொரு செயலிலும் குற்றம் கண்டு நகைப்பதும் ,  தன்னை மதியாதவரிடம் சண்டை போடுவதும் ,அவர்களை பிறர் மதித்து நடத்தல் கூடாது எனும் நோக்குடன் இல்லாத குற்றங்களை  சுமத்தி அவமதிப்பதும் மனித பண்புகளுக்கு என்றுமே அப்பாற்பட்ட செயலாகும் .
  


இறைவன் எவ்விடத்திலே வாழ்கின்றான்?...அவன்   நல்ல   பண்பு      உள்ள இடத்தில் வாழ்கின்றான் ,அன்பு உள்ள இடத்தில்    வாழ்கின்றான்   தன்னை சந்தேகிக்காத இடத்தில் வாழ்கின்றான் .     அவ்வாறு    ஓர் இடம்     உள்ளது
என்றால்    அது   நிட்சயமாக      குழந்தைகளின்         மனமாகத்தான்  இருக்க  வேண்டும்.    ஆதலால்தான்  குழந்தையும் தெய்வமும் ஒன்று   என்றார்கள். காரணம் அவர்களுக்கு அந்தப் பருவத்தில் போட்டி   மனப்பாண்மை என்பது இருப்பதில்லை .பிறரை வஞ்சிக்கும்   எண்ணம்    எதுவும்     இருப்பதில்லை. தெளிந்த      நீரோடை    என்பதே    மழலைகள்    மனங்கள்தான் .   நாம்    தெரியாத ஒன்றைப்  பற்றி   தெரிய     முற்படும்போதுகூட      எமக்கு அதிகம்    தன்னடக்கம் இருக்க வேண்டும் .


தன்னடக்கம் அற்ற பண்பு உடையவர்களுக்கு எதையும்      சொல்லிப்    புரிய வைப்பது   என்பது
மிகவும்   கடினமான ஒரு விசயம் .அவர்கள்    எப்போதும் தான் சொல்வதே   சரி என்று வாதிடும்
வல்லமை பெற்றவர்களாய்    மட்டும் இருப்பவர்கள்.   பிறரை   முட்டாள்   என்று கருதுபவர்கள்
என்றுமே ஒரு நல்ல அறிவாளியாக    இருக்க   முடியாது. அறிவாளிகளின்  பண்பே தான் அறிந்த
ஒன்றைப் பிறரும் அறியும் வகையில் செயல்படுத்துவதே .    ஒரு ஆசிரியர்     அவர் இல்லை
என்றால் எமக்கு அறிவுக் கண்களை திறந்து வைப்பவர் யார்?...நாம் கற்றது , கேட்டது  கண்களால்  
கண்டுகொண்டவை     இவைகள்தானே   எம் அறிவின் மூலதனம்!!!..........


 ஐம் புலன்களையும்  அடக்கி அகிலத்தில் தான் இருக்கும்   நிலை மறந்து மெய்ஞானத்தின்
வழியே  வாழ்வின் எல்லைகள்  கடந்து   இருந்த இடத்தில் இருந்து  கொண்டே    உலகத்தை
அளக்கும்    சக்தி   கொண்ட மா    மனிதனே எம்மில்    பெரியவன் .நாம் போற்றி   மதிக்கப்பட
வேண்டியவன் அவன் எமக்கு அருளிய   தத்துவங்களே      அறிவிற்கு   அத்திவாரம் . இதனை  
பின்பற்ற   மறந்தவர்கள்      எவர்களாயினும்    அவர்கள்   வெறும்   பதர்களே!!!......    நரிகளின்
ஊளையைக் கேட்டு  அஞ்சி    நடுங்கும்    ஐந்தறிவு    ஜீவனாக நாம்   வாழ்வதும்    எம் தவறே
ஆகும் .   எப்போதும்    எடுத்த    காரியத்தில்   தெளிவும்    உறுதியும்   இருத்தல்  வேண்டும் .
விமர்சனங்களுக்கு     பயந்தோ     அல்லது     சுயலாபம்   கருதியோ    பலருக்கும்    நன்மை
பெயர்க்கும்   செயலைக் கைவிடல் என்பது சிறந்த    அறிவாளிகளுக்கு    அழகல்ல .பலரும்
பாராட்டக்கூடிய ஒரு செயல் அதை    எல்லோராலும்    செய்து    விட    முடியாது .
இதற்க்கு   எப்போதும் தடைக்கல் அதிகம் வந்து விழும் .அதையும் தாண்டி சாதிக்கும் வரை
மனிதன் ஒரு போதும் ஓயாமல் உழைக்க வேண்டும் .


                                     
                                             

                                      

Wednesday, August 29, 2012

எவன் தலை போனாலும் எனக்கென்ன?...


அன்பு என்ற ஒன்றை அடிப்படையாக வைத்துத்தான்  இந்த உலகம் இயங்கிக்கொண்டு   இருக்கின்றது . நாம்  வாழும்      இந்த உலகத்தில்    இதுவரை எத்தனை விதமான அனுபவங்களைக் கண்டிருப்போம். அதற்க்குக்    காரணம் எல்லா மனிதர்களும் ஒரே மாதிரியான குணாதிசயம்    கொண்டவர்களாய்   என்றுமே    இருப்பதில்லை. எல்லா மனிதர்களுக்கும் ஒவ்வொரு விதமான ஆசைகள் எண்ணங்கள்  வளர்ந்துகொண்டேதான்   இருக்கும். ஆனாலும்   நாம் வாழும் இப் புவிதனில் எம்  வாழ்க்கை   என்பது   எப்போதும் பிறருக்கு நன்மை அளிக்கக் கூடியதாய்   அமைவதே சிறப்பாக்கும் .

சுயநலம் மிக்க எண்ணங்கள் உடையவர்களாய் நாம் இந்த வாழ்வைத் தொடரும்போது எம் மனம் எப்போதும் ஓர் குறுகிய வட்டத்தினுள் மட்டுமே பிரவேசிக்க முடியும்  என்பதையும் இதனால்    இந்தப் பிரபஞ்சத்தில்  உள்ள பல சந்தோசமான மன மகிழ்வைத் தரக்கூடிய உணர்வுகளை உறவுகளை என்றுமே    இழந்துதான் விடைபெறுகின்றோம் என்பதையும்  பலரும்  நினைவில் கொள்ள வேண்டும். விட்டுக் கொடுத்து   நடத்தல், வீணான யுத்தங்களை தவிர்த்தல். இயற்கையை ரசித்தல் .சக மனிதர்களின்   உணர்வுகளை மதித்து நடத்தல் போன்ற சிறப்பான குணாதிசயங்களை நாம் என்றுமே வளர்த்துக்கொள்ளல் என்பது மிக மிக அவசியமான ஒன்று .

                                 மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் அது என்னவென்றால் அது வேறொன்றும் இல்லை. மனிதர்களை மிருகங்களுடன் ஒப்பிடும்போது மனிதர்கள்  கொஞ்சம் நாகரீகம் தெரிந்தவர்கள் புரிந்துணர்வு அதிகம் உடையவர்கள் என்பதைத் தவிர இங்கே சொல்லிக்கொள்ளும் அளவிற்கு என்னதான் இருக்கின்றது!இன்றைய காலத்தில் இந்த ஒரு சில உயர்ந்த பண்பும் அரிதாகிக்கொண்டே வருகின்றது என்பதை இங்கு நாம் எல்லோரும் அறிவோம். நாகரீகம் என்ற     போர்வையில் சிதைந்து போகும் மனிதனின் பண்புகளைக் கண்டு    நாம் மனம் நோகத்தான் முடியுமே தவிர வேறு வழிகள் ஏதேனும் உண்டா  சொல்லுங்கள்?

பெரும் பெயரும் புகழும் பெறுவதற்க்கென்றே மனிதன் பொய்யிலும் புரட்டிலும் உழல்கின்றானே இவன் செயல்களைக் கண்டு நாம் அமைதி கொள்வது என்பதும்  எந்தவகையில் சாத்தியமாகும்?.. பதவி வெறியும் பொறாண்மையும் கொண்டு அலையும் மனிதன் அன்றாடம் செய்யும் தவறுகளால் இன்று உலகில் எத்தனை உயிர்கள் தினமும் பலியாகிக்கொண்டே இருக்கின்றது. இந்தப் பூமிப் பந்தில் அவதரித்த எம் இனத்தால் இன்று நடத்தப்படும் யுத்தங்களால் நாம் இழந்தவை எத்தனை எத்தனை !...மனிதன் மனிதனை சித்திரவதை செய்வதற்கென்றே எத்தனை விதமான கொடிய கண்டுபிடிப்புகளை மிகவும் சிரமப்பட்டு கண்டு பிடிக்கின்றான் !...ஆனால் மிருகங்கள் அவ்வாறு எதையும் கண்டு பிடித்ததுண்டா ?...தன்னை நெருங்கி வரும் மனித மிருகத்திடம் இருந்து எப்போதுமே தனக்கு ஒரு பாதுகாபிற்க்காகவே அவை எம்மைத் தீண்டுகின்றனவே தவிர எம்மைத் தேடி அலைகின்றனவா?....மனிதன் நினைக்கின்றான் உலகில் படைக்கப்பட்ட எல்லாமே முதலில் எனக்கு மட்டுமே சொந்தம் என்று.அதனால்தான் அவன் பிற உயிர்களை என்றுமே துச்சமாக மதித்து நடக்கின்றான் .ஆனாலும் நமது மூதாதையர் யார் என்று கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போம் .

உருவத்தால் வேறுபட்டிருந்தாலும் கொஞ்சமேனும் உள்ளத்தால் நாம் வேறுபட்டு உள்ளோமா?......அடிக்கடி கொப்புக்கு  கொப்பு  தாவுவது எம் இனத்துக்கே உள்ள சிறப்புக் குணாதிசயம் .இது ஒன்றே போதும் எம்மை நாமே 
இனம் கண்டு கொள்வதற்கு  .  பணமோ பதவியோ வாழ்வில் எம்மை என்றுமே உயரிய இடத்திற்கு கொண்டு செல்லாது .எம் மனம் எம் குணம் எப்போதுமே தூய்மையாக இருத்தல் வேண்டும். பிறரைப் பார்த்து நையாண்டி செய்வது எப்போதும் தனக்குக் கீழ்படிந்து நடக்க வேண்டும் என்று நினைப்பது இதுபோன்ற    தீய   ஒழுக்கங்களால்  மனித    மனங்களில் ஒரு தேவை அற்ற வீண் விகார புத்தி தோன்றுவதால் வரும் துயர் என்பதை கணக்கில் இட்டால் என்றுமே தாங்காது. ஆக ஒரு மனிதன் இன்னொரு மனிதனிற்கு தன்னால் ஆகக் கூடிய எந்த ஒரு உதவியையும் செய்ய முடியாது போனாலும் கவலை இல்லை. பிறருக்கு  தீங்கு செய்ய நினைப்பதைக் கைவிட்டாலே அவன் புனிதனாக மண்ணில் மதிக்கப்படுவான். வாழ்வில்  நாம் அனைவரும் ஏதோ ஒரு குறிக்கோளுடன்தான் இங்கு வாழ்ந்துகொண்டு இருக்கின்றோம். எம் வாழ்க்கை என்பது எப்போதுமே நாம் திட்டமிட்டபடி நிகழ்வதில்லை. பல சமயங்களில் பெருத்த தோல்வியும் அவமானமும் எம்மைத் தேடி வரும் சந்தர்ப்பங்கள் அதிகமாக இருக்கும். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள எம் முயற்சிகள் யாவும் நேர்வழியைத்தான் பின்பற்ற வேண்டுமே தவிர தவறான பாதையில் பிறரைப் பாதிக்கும் வகையில் என்றுமே நடந்துகொள்ளக் கூடாது என்பதே எனது ஆணித்தனமான கருத்து .
                                
ஆயிரம் முறை முயற்சித்து ஒரு முறை கட்டிய வீடு  ஆயினும்     என்ன!..
போகி வந்ததும் துடைத்தெறியப்படும் வெறும் தூசி என்றே நினைப்பதால் 
இதன் கனவுகள்    கூட    சிதைந்து    போகும்.  ஆனாலும்  முயற்சி     மட்டும் 
மேலும் மேலும் தொடரும்   புதிய வெற்றிப்படிகளை நோக்கி !!!..................... 

Monday, August 27, 2012

காலத்தால் அழியாத எழுத்துக்கள்!...


சிப்பிக்குள் முத்தைப்போல் முடங்கிக் கிடக்கும்    நினைவுகளை    மெருகூட்டி
அழகிய சிந்தனையுடன் பிறரும் அறிந்து பயன்பெறும் வகையில் எழுதும் ஆக்கம் என்பதே சிறந்த ஆக்கம் என்று கருதக்கூடியவை.இந்தமாதிரி ஆக்கங்களை எப்போதும் எழுதுவதற்கு  நாம் நிறைய விசயங்களைத்  தெரிந்து 
வைத்துக்கொள்ள வேண்டும் .இதற்காகவே பல  அரிய   நூல்களைத் தேடி தினமும்   வாசித்தல் என்பது எமக்கு மிகவும் சிறப்பானதொரு பயனை  அளிக்கும் .அன்றாடம் எம்மைச் சுற்றி நிகழும் நல்ல   தகவல்களை  சேகரித்து 
அதன் அடிப்படையில் நாம்  எம்  கற்பனை  வளம்கொண்டும் படைப்புகளை பிறர் மனம் பாதிக்காத வகையில் எழுதிக்கொள்ளலாம் .  


எழுத்துக்கள் என்பது இந்த உலகத்தின் கண் போன்றது .பிறர் கொடுக்கும்  தகவல்களை அடிப்படையாகக்  கொண்டுதான் நாம் இங்கு எம் தேவைகளை பூர்த்தி செய்யவும் அறிவை வளர்த்துக் கொள்ளவும் அன்றாட வாழ்வில் முயற்சிக்கின்றோம். அந்த வகையில் மனித நேயம் மிக்க நூல்கள்  பல   மகான்களால் எழுதப்பட்டு அதன் பயன்பாட் டினால்  இந்த  உலகம் மிகப் பெரிய நன்மைகளை இதுவரை அடைந்து கொண்டிருக்கின்றது   என்பது இங்கு 
நாம் அனைவரும் அறிந்த ஒரு     உண்மை!...அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு அலசி ஆராய்ந்து   மிகத் துல்லியமாக  எந்த ஒரு ஆக்கத்தையும் மக்கள் மனதில் ஆழமாய்  பதியும் வண்ணம்   எழுதி வைத்தார்கள். இன்றும் சிலர் இதுபோன்ற ஆக்கங்களைப் பின்பற்றி அ தன் சுவடுகள் அழியாத வண்ணம் எழுதி வருவதை நாம் அறிவோம் .அவரவர் அறிவுக்கு எட்டிய நல்ல தகவல்களை பகிர்ந்துகொள்ளவே நாமும் முயற்சிக்க வேண்டும் அதைவிட்டு
உண்மைக்கு முரணான தகவல்களையோ அல்லது மதங்களை இழிவுபடுத்தி எழுதும் ஆக்கங்களையோ தவிர்துக்கொள்ளல் வேண்டும் .கூரிய வாள்களை விடவும் கூர்மையானது எழுதுகோல் அதனால்  .இதனை   பயன்படுத்தும் நாமும் முதலில் எம் சிந்தனைக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். கவிதை என்பது முழுக்க முழுக்க கற்பனைகளை மையமாகக் கொண்டது. பல கதைகளும் அவ்வாறுதான். ஆனால் செய்திகள் விமர்சனங்கள்  அப்படி அல்ல.நோயுற்று இருக்கும் ஒருவரை இறந்துவிட்டார் என்று எழுதுவது தனி மனித உரிமை மீறல் .இது பலரையும் பாதிக்கக்கூடிய விசயம். எமக்குத்  தெரியாத ஒரு செய்தியை முழுமையாக ஆராயாமல் அதன் வெளித் தோற்றத்தை வைத்து திரிவுபடுத்தி எழுதுதல் என்பதும் மனிதாபிமானம் அற்ற செயலாகும். நாம் எழுதுகின்றோம் என்பதற்காக எதை வேண்டுமானாலும் எழுதிவிடலாம் என்று நினைப்பது முற்றிலும் தவறான ஒரு விடயம். நல்ல ஆக்கங்கள் எப்போதும் வாசகர் நெஞ்சங்களை விட்டகலாது என்பதற்கு இந்தக்  கடிதம்


                                      கவிஞர் .பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம்
ஒரு நல்ல உதாரணமாக என் மனக் கண்ணில் பட்டது. அதனால்தான்  இன்று  இந்த ஆக்கத்தை எழுதவேண்டும் என்று எண்ணம் கொண்டேன் வலைத்தளத்தில் எழுதிவரும் நாமும் எம் ஆக்கங்களை    கொஞ்சம் ஆய்வு செய்து தரமான ஆக்கங்களை வெளியிடுவதற்கு முயற்சிக்க வேண்டும் என்பதே என் எண்ணக் கருத்தாகும் .
                                             
                                                   
அறிவெனும் சுடர் மிளிர
அன்பெனும் மை திரட்டி
தெளிவுற நற் கருத்தை
சிந்தனைக்கு அடி பணிந்து

அறநெறி தனில் நின்று பிறர்
அகம் அது குளிர்ந்திடவே
தினம் ஒரு கவி பாடி எம்
செந்தமிழதை வளர்த்திட வாரீர்!!!....


                                            

Sunday, August 26, 2012

வசந்த மண்டபம்!...


இசை பாடும் குயிலுக்கு 
வசந்த மண்டபம் காடுதானடா!...
இதமான காற்றுக்கும்
வசந்த மண்டபம் காடுதானடா!...

அசைகின்ற பூமிக்கு 
வசந்த மண்டபம் காடுதானடா!...
அகிலத்தில் உயிர்களுக்கே  
வசந்த மண்டபம் காடுதானடா!...



புது வீடு கட்டிக் கட்டி 
ஏசி போட்டாச்சு எதுவும் 
புரியாமல் காடுகளை 
தினமும் வெட்டி விட்டாச்சு!!....

மணல் அள்ளிக் கடற்பரப்பை 
அகட்டி விட்டாச்சு !!!!..............
மழை நீரின் வருகைக்கும் 
முற்றுப் புள்ளி வச்சாச்சு!!.....



தினந்தோறும் குண்டு தள்ளி                                               
 நம் நிலம் அதிர்ந்தாச்சு!!!......
தீ வந்து எமைத் தாக்க
நல் வழி வகுத்தாச்சு!!!....

உலகத்தைக் கைக்குள்ளே 
கொண்டு வந்தாச்சு இனி 
உயிர் வாழ வழியின்றி 
பெரும் குழி பறிச்சாச்சு!....


  
அரிதான உயிரினகள் பல 
அழிஞ்சு போயாச்சு!!.........
நம்ம அடையாள சின்னங்களும்
துலைந்து போயாச்சு!....

இடர் வந்து நெஞ்சுக்குள்ளே 
ஓட்டிக்கொண்டாச்சு!...........
அதிலும் உலகத்தின் அழிவுக்கும் 
இங்கு தேதி குறிச்சாச்சு!!!....



இது நடந்தாலும் நடக்கலாம்  
இந்நாளிலே எதற்கும் நாம் 
இருக்கின்ற காலத்தைப் 
பொன்போல் எண்ணி 

மனித வளம் காக்கும் செல்வம் 
அதைக்(கொச்சம்) காத்து நிற்ப்போமே 
எதற்கும் மறக்காமல் அன்போடு 
நாம் மனிதர்களாய் வாழ்ந்திடுவோமே!....

டிஸ்கி:என் தளத்தின் வடிவமைப்பு .
                இது ஒரு காடு நீங்கள் கருத்திடும் 
                இடம்கூட அந்த மரத்தின்
                உடல் மீதுதான்!!!................ 
                 இந்த புதிய வசந்த மண்டபத்திற்கு உங்களை 
                 வருக வருக என்று வரவேற்கின்றேன் அன்பு 
                 உறவுகளே 
                                            
                                 

Friday, August 24, 2012

இப்படியா அப்படியா வேறு எப்படி....

கற்றது கை மண்ணளவு கல்லாதது  உலகளவு எனில் இந்த உலகத்தில் நாம்
பிறக்கும் போதே எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு வந்து பிறக்கின்றோமா?.
அல்லது  இறக்கும் போது எதுவுமே கற்றுக் கொள்ளாமல் இறக்கின்றோமா?...
அவரவர் சக்திகேற்றது எதையோ தன் தேவை கருதி மனிதன் கற்கின்றான்
அவன் கற்றுக் கொண்ட அறிவை வைத்துக்கொன்டுதானே அவனும் தனது
அன்றாட தேவைகளைப்   பூர்த்தி   செய்கின்றான் .அப்படி இருக்கையில் நாம்
அறிவாளி முட்டாள் என்ற பேதங்களை நமக்குள் வளர்த்துக் கொள்ளலாமா!.
தெரியாததைத்  தெரிந்துகொள்ள முயற்சிப்பவனே திறமைசாலி.ஆனாலும்
எனக்கு எதுமே தெரியாது தெரிந்துகொள்ளவும் ஆர்வம் கிடையாது எனில்
இப்பேர்ப்பட்ட மனிதர்கள் எவ்வாறு தம் வாழ்வை வெற்றிகொள்ள முடியும்?..


இங்கு குறைகளை சுட்டிக்காட்டி  நல்வழிப்   படுத்துபவர்கள்    மனிதர்கள் குத்திக்காட்டி  திசை திருப்புபவர்களை   எவ்வாறு சொல்வது!........
பிறந்த குழந்தை பிறந்த கணமே தவழ்ந்ததாகவோ ஓடியதாகவோ உலகில்
ஒரு நிகழ்வு எங்கேனும் கேள்விப் பட்டதுண்டா?...ஆக ஒரு மனிதன் தனக்கு
தெரியாதவற்றை தெரிந்துகொள்ள முயற்சிக்கும்போது ஆயிரம் தவறுகள்
நிகழாலாம் ஒரு வேளை நாம் எடுக்கும் முயற்சிகள்கூட  தோல்வியுறலாம்.
அதற்காக நாம்  எதையும் கற்றுக்கொள்ளத்  தகுதி அற்றவர்கள் என்று எம்மை
நாமே புறக்கணித்தல் முறைதானா?...
                                   
               எதையும் சாதிக்க வேண்டும் என்ற மன உறுதியை இப்போதுதான்
எமக்குள்ளே நாம் வரவளைத்துக்கொள்ளல் வேண்டும் . எம் தேவைகளை
நாமே பூர்த்தி செய்யக் கற்றுக்கொள்ள வேண்டும் .அடுத்தவர் தயவில் எம்
வாழ்க்கை  என்று வாழ்ந்து வந்தால்  எமது   எதிர்காலம்   என்பது என்றுமே
எமக்கு அர்த்தமற்றதாகவே அமையும் . வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட
நாம் எம்மைப்போல் அல்லாது எமது சந்ததியினரை வளப்படுத்த சிற்சில
பயிற்சிகளை   அவர்களுக்கும்  நாம்   குழந்தையில்   இருந்தே வழங்கி வர வேண்டும் .
                                                       
சிறு பிள்ளைகளை அதட்டுவதோ அல்லது எதற்கு எடுத்தாலும் பயம்
உறுத்தி  வளர்ப்பதோ மிகவும்  தவறான காரியம் என்பதை   நாம் நன்கு
உணர வேண்டும் .சின்ன வயதில் இருந்தே எதற்கும் பயந்த சுபாவம்
உடையவர்களாய் வளரும் குழந்தைகள் படிப்பிலும் சரி பிறருடன் பேசிப்
பழக , தனக்கு வரும் சந்தேகங்களை  ஆசிரியரிடமோ அல்லது உறவினர்
நண்பர்களிடமோ கேட்பதக்கும் மிகவும் கூச்சப் படுவார்கள் .இதனால்
எதையும் அறியும் தன்மையும் ,வெளிக்காட்டும் தன்மையும் இவர்களிடம்
என்றும் குறைவாகவே இருக்கும் .எனவேதான்  ஐரோப்பா  நாடுகளில்
சிறு பிள்ளைகளுக்கு பாடசாலை ஆரம்பிக்கும் முன்பே பிள்ளைகளுடன்
சேர்ந்து விளையாடுவதற்கும் ,விளையாட்டு மூலம் கல்வி பயிலவும் 
இரண்டு வருட பயிற்சி வழங்கிய பின்னர் எழுதவும் வாசிக்கவும் கற்றுக்
கொடுக்கின்றனர் .பிள்ளையின் துணிச்சல் ,ஒழுக்கம் ,ஆக்கத் திறன் என
அனைத்தும் பார்த்தே இவர்களின் வகுப்புத் தரமும் பிரிக்கப் படுகின்றது.
                               
                                     
                                  பயங்கரமாய்க் குளிரும் ஆனால் இவர்களுக்கு!..
                                       
 
                                   தம்பி வேணாம்டா  ராசா விழுந்தா நீ செத்திருவ !!!.. 
                       
                   
                                    அட பாவமே பச்சக் குழந்த தனியா சாப்பிடுதே!!!...                                                         

                                         
 என்ன இருந்தாலும் கடின உழைப்பாளிகள் நம்ம ஆளுங்கதான்!!!.....
இதை மேலும் வளப்படுத்த வேண்டும் எனில் அச்சம் தவிர்த்து எம்
அன்பால் வெல்வோம் .நாளைய சமுதாயத்தின் விடிவெள்ளிகள்
இவர்கள் என்பதைக் கருத்திக்ல்கொண்டு ..                                                                                           
      

Sunday, August 19, 2012

அம்மா இதுதான் அன்பின் இல்லம்!.. .



அம்மா கருவறையில் எம்மை சுமந்த கணமே தன்னை அன்பெனும் சிறை அறைக்குள்
பூட்டிக் கொள்பவள். அகிலத்தில் இவள்போன்று அன்பு செய்ய யாருண்டுசொல்லுங்கள்?.
வறுமையிலும்   எளிமையான   தோற்றம் உடையவள் .பொறுமைக்கு   ஆதார  சக்தியே
இவள்தான். சிறு  பிள்ளைத் தனமாய் நாம் கொடுக்கும் கஸ்ரங்கள்  நஸ்ரங்கள் எல்லாமே
இவளின்   கண்களுக்கு    வேதனையைக்   கொடுக்கும்  அல்லால்  கோவத்தை    உண்டு
பண்ணாதே!..  .அடுக்களையில்   அடைந்து    கிடந்து   எம்மை எல்லாம் மனம் குளிர வாழ
வைப்பவளும் அவள்தானே. ஈரேழு ஜென்மங்கள்    ஆனாலும்   எமை  ஈன்று   எடுத்தவள்
கடன் தீர்க்கவா முடியும்!..அப்படி இருக்கும் போது எம்மைச் சுமந்தவளை எதிர் காலத்தில்
நாம் சுமப்பதுதானே   மனிதத் தன்மை!..வரம்    கொடுக்கும்   சாமிக்குக்   கூட    காணிக்கை
கொடுத்து    பழக்கப்   பட்டவர்கள்   நாங்கள் .எம்மையே தன்  வரமாக   நினைத்து  வாழ்ந்த  
இந்த    சாமிக்கு   நாம்   செய்ய   வேண்டிய பணிவிடைகள்  ஏராளம் இருக்கின்றதே. அப்படி  
இருக்க  ஒரு வேளை   உணவு   கொடுக்கவும்  ஒதுங்க   ஒரு   இடம்   கொடுக்கவும்  சினம்



கொள்ளலாமா?....  தன்   கருவறையில்  இடம் கொடுத்தவள்   தாய்     அன்று. இன்று   தன்
மகன்      தனக்கு    இல்லை  என்று  தெரிந்த    பின்னால்  வரும்துயர்  அதை    நாம்
அறிந்திருக்க  வேண்டாமா!... வந்த  பெண்ணை  வாழவைக்க    நினைக்கும்  ஆண் மகன்
தன்னை     பெற்று    வளர்த்தவளை    எந்த   ஆதரவும் இன்றி தவிக்க விடலாமா?.. கட்டிய
மனைவிக்கு கோவம் வந்தால் அவளுக்கு அவள் தாய் வீடு உள்ளது அது போல் எம்மைப்
பெற்றெடுத்தவள் அவள்  எங்கு   போவாள் ?...மகன் மருமகன்   ஆகிக்   காட்டும்  அன்பில்
சிறு   பங்கேனும்  தன் தாய்  மீது    காட்ட மறந்தால்   பெற்றவளுக்கு    இதை   விட பெரிய
தண்டனை என்னதான் இருக்க முடியும்?..எம் வசந்த கால கனவுகள் வானில் சிறகடித்துப்
பறக்கலாம்.ஆனாலும்   கடந்த காலம்  எல்லாமே கண்ணை விட்டு மறைவதுதான் தவறு.
ஒரு   பிள்ளை   பெற்றெடுத்து  வளர்ப்பதற்குள்  அவர்களைப்  பெற்றவர்கள்  படும் துன்பம்
என்பது    அளவிட   முடியாத   ஒன்று....   அதனிலும்   கொடியது  நாம்   இன்று   அவர்களை
முதியோர்   இல்லத்திலும்  தன்னந்  தனிமையிலும்  விட்டு     விட்டுச்       செல்லுதல்தான் .
                           மிகவும் வேதனையான ஒரு சம்பவம் கடந்த சில நாட்களின்முன்   நான் ஓர்
முதியோர்   இல்லம்    சென்றிருந்தேன் . எனக்குத் தெரிந்தவர்கள்   அங்கு  இருக்கின்றனர்
என்று அறிந்து அவர்களைப் பார்ப்பதற்காக .பாவம் ஒரு    எண்பத்தைந்து வயது    மதிக்கத்
தக்க   அம்மா    ஒருவரை    நான்  அங்கு சந்திக்க நேர்ந்தது   கிட்டத் தட்ட    நான்கு
வருடங்களாக    அவர்     தனிமையில்   ஒரு    அறையில்    விடப்பட்ட      நிலையில் புத்தி
சுவாதீனம் அற்று  இருப்பதை  அறிந்தேன், அங்கு சென்ற எனக்கு ஓர் அதிர்ச்சியான தகவல்
கிட்டியது. இது ஒரு ஐரோப்பா  நாடு  ஒன்றில்   உள்ள வயோதிபர்   இல்லம் .   இங்கு   பணி

புரிபவர்கள் பெரும்பாலும்   வெள்ளைக்காரர்கள்தான் .அந்த   அம்மாவிற்கு அங்கு சென்று
பார்க்க பிள்ளைகள்   இருவர்  இருந்தும்   அவர்கள்   எப்போதோ    ஓரிரு   தடவைகள்   வந்து
போனதாகவும்    அந்த      அம்மாவைக்     கவனிக்க   யாரும்   இல்லை    என்றும்    மிகவும்
                          வேதனையுடன்   சொன்னார்கள் .  தாங்கள்    அங்கு    கொடுக்கும்    உணவுகூட
(வெள்ளைக்காரரின்  சாப்பாடு அது )அவர் விரும்பி சாப்பிடு  வதில்லை  என்றும்  அவருக்கு
எமது நாட்டு   சாப்பாடுதான்   மிகவும் பிடிக்கும்    என்றும்   சொன்னார்கள்   அதைக்     கேட்டு
நானும்  அவருக்கு  அந்தசாப்பாட்டை  கொண்டு  வந்து  கொடுக்கலாமா?. என்று கேட்டதற்கு
மிகவும் வேதனையுடன்  சொன்னார்கள் அப்படி  கொடுத்தால் அந்த புண்ணியம் உங்களுக்கு
எப்போதும்  கிட்டும் என்று!!!.............




இதைக் கேட்டவுடன் எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது .முன்
பின் தெரியாத வெள்ளைக்காரார்கள் கூட அந்தத் தாயின் நிலை கண்டு
பரிதாபப் படும்போது எம்மிலும் சிலர் இப்படியும் இருக்கின்றார்களே
என்று .இப்போது சொல்லுங்கள் தாயென்று வந்தால் எந்த  இனத்திற்கும்
தனிப் பாசம் பொங்கி வழியும் இல்லையா?...இதற்க்கு மேலும் நாம்
எதையாவது கற்றுக் கொள்ள நினைத்தால் இந்த ஐந்தறிவு யீவன்களே
போதும் .எங்கள் அகக் கண்களைத் திறந்து விட .பெற்ற தாய் தந்தையை
பேணிப் பாது காக்காத பிள்ளைகள் எந்தக் காலத்திலும் மகிழ்ச்சியாக
வாழ இயலாது என்பதுதான் என் எண்ணக் கருத்து.
 .
டிஸ்கி :இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்களையும் என்னோடு பகிர்ந்து கொள்ளத் தவறாதீர்கள் அன்பு உறவுகளே .
                                                   மிக்க நன்றி வரவுக்கு .

Saturday, August 18, 2012

இது அன்பு உள்ளம் விடும் தூது.

எண்ணங்களில் பல வர்ணங்கள்  கலந்து
நல் இதயங்கள் மகிழ புது கதைகள்தான் தந்து
உறவென்னும் பாலம் இணைத்திட வந்தேன்
தமிழோடும் தமிழ் பேசும் நல் உறவுகளோடும்

இனி இந்த இல்லம் இது உங்கள் உள்ளம்
மனம்போல (நற்) கருத்து மலரட்டும் என்றும்
புதிய வாசல் திறந்து வைத்தேன் அங்கே
பூவை மட்டும் மலர விட்டேன் !!!............



இனிய நட்பு தொடரட்டுமே எம்
இதயம் அதனால் மகிழட்டுமே!......
வருக வருக உறவுகளே உங்கள்
வரவுக்காக காத்திருக்கிறேன்!!........